பூதத்தான் வரவு
பட்டக்குடி பூதத்தான் வரார் ப்ராபல்யமாக
சாட்டையில்லாமல் பூசுரன்
கூட்டமாய் கைகட்டி நிற்க
கேட்ட வரங்கள் கொடுக்க
ஓட்டமாய் உல்லாசத்துடன் (பட்டக்குடி)
வனம் தன்னிலே இருந்து
அனந்த நகரில் வந்து
நினைத்ததெல்லாம் கொடுத்து
குணம் தந்து இரட்சிக்கவே (பட்டக்குடி)
குற்றம் குறைகள் வராமல்
புத்தன் தெருவின் நடுவில்
நித்தியமாக வசித்து
பக்தர்களை காத்திடவே (பட்டக்குடி)
ஈட்டி முகரம் கதையும்
தோட்டி கட்கம் குந்தம் பாசம்
தீட்டிய வாள் பரிசையும்
பூட்டின வில் அம்பும் கொண்டு (பட்டக்குடி)
கோடி ஜனங்கள் கூடியே
மோடியாய் பூச்சடை போட்டு
பாட்டு வாத்யங்கள் முழங்க
ஆடிச்சாடி சுவாமி இதோ (பட்டக்குடி)
வீரபத்ரன் கருப்பன்
வீரன் செல்லப்பிள்ளை மாடன்
சூரன் பைரவன் சுடலை
கோடிப் பரிவாரம் சூழ (பட்டக்குடி)
சுந்தரயெக்ஷி இசக்கி
செந்தவை சாமுண்டிச் சாத்தன்
சுந்தர பூதங்கள் பந்தம்
தீவட்டிப் பிடித்துக்கொண்டு (பட்டக்குடி)
சிங்கங்கடுவாய்க்கரட
எங்கும் யானை கூட்டங்களும்
செங்குரங்கு பன்னிப் புலி
செங்களமாய் வேட்டையாடி (பட்டக்குடி)
மண்டலத்தில் மானிடர்க்கு
கண்ட வியாதிகள் வராமல்
குண்டாந்தடியால் விரட்டும்
சண்டப்பிரசண்டராய் இதோ (பட்டக்குடி)
சத்யவாகீஸ்வரர் இவர்
ஆதிகுரு பூதத்தானே
நித்யமாய் மானிடரெல்லாம்
பக்தியாய் ஸ்துதிகள் செய்ய (பட்டக்குடி)